தொடர்ந்து 27 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடிக்கிறது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 104 அடியாக நீடிக்கிறது.;

Update:2021-12-18 02:12 IST
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 104 அடியாக நீடிக்கிறது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. 
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 
104 அடி
நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. கடந்த மாதம் 20-ந் தேதி மதியம் 2 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. 
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.73 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 907 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 600 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 27 நாட்களாக அணையின் நீர்மட்டம் 104 அடியை கடந்து நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்