கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.;
கோவை
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மாணவி
கோவையில் உள்ள ஒரு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி யில் 16 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவருடைய சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஆகும். அதே ஊரைச் சேர்ந்த சர்வேஸ்வரன் (வயது22) கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கோவையில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர், அந்த மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாப்பிரெட்டிபட்டிக்கு சர்வேஸ்வரன் கடத்தி சென்றார். அவர், அங்கு ஒரு வீட்டில் மாணவியை தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த மாணவியை சர்வேஸ்வரன் கடத்திச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சர்வேஸ்வரனை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.