ஈரோடு அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை; வனத்துறை அதிகாரி எச்சரிக்கை

ஈரோடு அருகே குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.;

Update:2021-12-24 02:37 IST
ஈரோடு
ஈரோடு அருகே குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
மர்மவிலங்கு
ஈரோடு அருகே உள்ள 46 புதூர் பகுதியையொட்டி சஞ்சய் நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, சஞ்சய் நகர் முதல் குறுக்கு சந்து பகுதியில் வசித்து வரும் கொற்றவேல் என்பவருடைய வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் மர்ம விலங்கு ஒன்றின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
இது தொடர்பான தகவல்கள் வெளியானதும், ஈரோடு வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் கண்காணிப்பு கேமராவை முழுமையாக ஆய்வு செய்து, கேமராவில் பதிவாகி இருந்தது மரநாய் என்பதை கண்டறிந்ததுடன், அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் எடுத்துக்கூறினர்.
நாயை கவ்விச்சென்ற சிறுத்தை
இதற்கிடையே சஞ்சய் நகர் பகுதியில் மர்மவிலங்கு நடமாட்டம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. வாட்ஸ்அப் மூலம் இந்த தகவல் அனைத்து இடங்களுக்கும் பரப்பப்பட்டு வந்தது. சஞ்சய் நகர் பகுதியில் வன அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, அந்த பகுதி மக்கள் அச்சம் விலகி நிம்மதி பெருமூச்சு விட்ட பிறகும், வாட்ஸ்அப்பில் இந்த தகவல் பகிரப்படுவது மட்டும் குறையவில்லை. முதலில் வந்த செய்தியுடன், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மரநாய், மர்மவிலங்கு என்ற வகையில் பரப்பப்பட்டு வந்தது.ஆனால் திடீரென்று கடந்த ஓரிரு நாட்களாக சஞ்சய் நகர் செய்தியும், அத்துடன் ஒரு வீடியோ காட்சியும் இணைந்து பகிரப்பட்டது.  இந்த காட்சி ஈரோடு சஞ்சய் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்தாக செய்தி பகிரப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
அதைத்தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு வனச்சரகர் ரவீந்திரநாத், ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் கொண்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் சஞ்சய் நகர் பகுதிக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே வீடியோ பதிவாகி இருந்த கொற்றவேல் வீட்டுக்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது போன்ற எந்த காட்சியும் அதில் பதிவாகவில்லை. அதுமட்டுமின்றி, வீடியோவில் வரும் வீடு அந்த பகுதியிலேயே இல்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்களிடம் வனத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.
வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை
இதுபற்றி அவர் கூறும்போது, ‘சமீபத்தில் சஞ்சய் நகர் செய்தியுடன் இணைத்து பகிரப்பட்டு வரும் வீடியோ படம் வேறு எங்கோ எடுக்கப்பட்டது. ஈரோடு குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட எந்த மர்மவிலங்கின் நடமாட்டமும் இல்லை. ஏற்கனவே வீடியோவில் பதிவானது மரநாய் என்று கண்டறியப்பட்டது.
தற்போது படத்தை மாற்றி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வேறு காட்சியை இணைத்து பகிர்ந்து வதந்தி பரப்பிய நபரின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர் மீது சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அச்சம் இல்லை
சஞ்சய் நகர் வீட்டின் உரிமையாளர் கொற்றவேல் கூறும்போது, மர்மவிலங்கின் படத்தை மாற்றி, ஏதோ மர்மநபர் வேறு காட்சியை பகிர்ந்து வருவதால் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. வனத்துறையினர் விளக்கம் அளித்து உள்ளதால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை’ என்றார்.
இந்த சம்பவத்தால் நேற்று சஞ்சய் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்