கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகள் உள்பட 9 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 3 மாணவிகள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கொன்று புதைப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நாடமாட்டம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் 20 வயது உடைய வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 18-ந் தேதி கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் (வயது 20) என்பது தெரியவந்தது.
பணம் பறிப்பு
இவர் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். பள்ளி மாணவிகள் சிலரிடம் செல்போன் மூலம் நட்பு கொண்ட பிரேம் குமார், அவர்களிடம் ஆபாசமாக பேசி அதனை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இத்தகைய ஆபாச பேச்சு மற்றும் மாணவிகளின் புகைப்படத்தை அவர்களது பெற்றோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை இணையத்தில் வெளியிட போவதாக மாணவிகளை மிரட்டி அவர்களிடம் பிரேம் குமார் அடிக்கடி பணம் பறித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினையால் பள்ளி மாணவிகள் 2 பேர் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதனையடுத்து அந்த மாணவிகளில் ஒருவர் தனது சகோதரியான 18 வயதே ஆன கல்லூரி மாணவியிடம் விஷயத்தை சொல்லி அழுது உள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி மாணவி தனது இன்ஸ்ட்ராகிராம் நண்பரான கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோக் என்கிற அசோக் குமாரிடம் (21) தகவல் தெரிவித்தார். அப்போது பிரச்சினைக்குரிய கல்லூரி மாணவர் பிரேம் குமாரை தீர்த்து கட்ட அசோக் குமார் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கைது
இதனையடுத்து பள்ளி மாணவிகள் 2 பேரும், கடந்த 17-ந்தேதி நைசாக பேசி கல்லூரி மாணவர் பிரேம் குமாரை சென்னை செங்குன்றம் அடுத்த சுங்கசாவடி அருகே அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து பிரேம்குமாரை அடையாளம் கண்டு கொண்ட அசோக் குமாரும் அவரது நண்பர்கள் சிலரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவர் பிரேம் குமாரை கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்ட பிரேம் குமாரை கும்மிடிப்பூண்டி அடுத்த ஈச்சங்காடு மேட்டிற்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்து அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்து உள்ளது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்ற தீவிர விசாரணை மற்றும் வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (21), செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த லெபின் (22), ஜெகநாதபுரத்தை சேர்ந்த தமிழ் என்கிற பிரவீன் குமார் (21), நெடுபெரும்பாக்கத்தை சேர்ந்தத ஸ்டீபன் (22), ஜெகநாதன் (20) ஈகுவார்பாளையத்தை சேர்ந்த ஞானசேகர் என்கிற மோசஸ் (29) மற்றும் 18 வயதான கல்லூரி மாணவி, 16 வயதான 2 பள்ளி மாணவிகள் என மொத்தம் 9 பேரை ஆரம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.