இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்
இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்;
கோவை
மதத்தை பார்க்காமல் மனிதத்தை பார்த்து இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரியும், பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுவிக்கக்கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அப்துல் வகாப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது
குழு அமைப்பு
20 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.
நாளை (இன்று) நாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்கின்றனர்.
ஆனால் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள், இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க மறுக்கின்றனர்.
அண்ணா பிறந்தநாளில் விடுதலையான 700 சிறை கைதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை.
தற்போது ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது குறித்து குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த குழு தேவையற்றது.
இஸ்லாமியர் விடுதலை
மதத்தை பார்க்காமல் மனிதத்தை பார்த்து இஸ்லாமிய சிறை கைதிகள், பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும்.
எதிர்கட்சியாக இருக்கும் போது அவர்களின் விடுதலையை பற்றி தி.மு.க. பேசியது. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் தி.மு.க.விற்கு வாக்கு அளித்தனர்.
தி.மு.க.வினர் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவது பெருமை தான், அந்த அளவிற்கு நாங்கள் வளர்ந்து உள்ளோம்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணம். தரக்குறைந்த பேச்சு என்பதை தி.மு.க.வினர் கூறக்கூடாது. பேசக்கூடாது.
அவர்கள் தரக்குறைவாக தான் பேசு வாங்க. அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்பது நல்ல ஜனநாயகம் அல்ல.
பா.ஜனதா இதைத்தான் செய்கிறது. அதையே தி.மு.க.வும் செய்கின்றது.
அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்பது மனநோய் அல்ல. அரசு சரியாக இருந்தால் பேசப்போவதில்லை.
ஓட்டுக்காக இவர்களின் விடுதலையை பேச வில்லை. உணர்வுக்காக பேசுகிறேன்.
சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை அடையும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தி.மு.க.வினர் 15 பேர் கைது
சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வை சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த னர்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தி.மு.க.வினரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஆனால் அதை ஏற்காமல் தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
உடனே அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் தி.மு.க. வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது சீமானுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய தி.மு.க.வினர் 15 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.