சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,275-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,275-க்கு ஏலம் போனது.;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்றும் வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2½ டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 275-க்கும், முல்லை ரூ.875-க்கும், காக்கடா ரூ.1,050-க்கும், செண்டுமல்லி ரூ.160-க்கும், பட்டுப்பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.