தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்; அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தை அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.;
ஈரோடு
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தை அமைச்சர் சு.முத்துசாமி மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள்
தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்’ என்ற பெயரில் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் நடப்பாண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.11 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ரூ.46 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு, நாவல், புளியன், பெருநெல்லி, செம்மரம் உள்ளிட்ட 3 லட்சத்து 11 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
ஊக்கத்தொகை
இதில் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு வனத்துறையின் கீழ் உள்ள அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்து மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா ஈரோடு வைராபாளையத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். இதில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது அவர் கூறும்போது, ‘மரக்கன்றுகளை பெறும் விவசாயிகள் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், மரக்கன்றுகளை பராமரிப்பு ஊக்கத்தொகையாக 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படும்’ என்றார்.