ஒன்றிய கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுராந்தகம் ஒன்றிய கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2021-12-28 15:25 IST
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழப்பக்கத்தை சேர்ந்தவர் செந்தில். இவர், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆவண காப்பக துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரேணுகா (வயது 40). வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் சிலாவட்டம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரேணுகா, சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சினை இருந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ரேணுகா, நேற்று காலை தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை, உறவினர்கள் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரேணுகாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்த ரேணுகாவுக்கு 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 10 வருடங்களுக்கு மேலாக குழந்தை இல்லாமல் தவித்த அவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்