காஞ்சீபுரத்தில் கார் மோதி பெண் பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

காஞ்சீபுரத்தில் கணவர் கண் எதிரே கார் மோதி பெண் பலியானார்.

Update: 2021-12-28 12:03 GMT
காஞ்சீபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா செம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கீதா பிரியா. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் சென்னையில் பணிபுரியும் இருவரும், விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து காஞ்சீபுரம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.

காஞ்சீபுரம் காந்திரோடு ரங்கசாமி குளம் அருகே செல்லும்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக காரை நிறுத்திவிட்டு கீதாபிரியா கடைக்கு சென்றார். ரீசார்ஜ் செய்து விட்டு கடையில் இருந்து வெளியே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேகமாக வந்த கார் கீதாபிரியா மீது பயங்கரமாக மோதியது.

இதில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுடன் சேர்ந்து கீதாபிரியா (29) உடல் நசுங்கி கீழே விழுந்தார்.

போக்குவரத்து மிகுந்த சாலையில் கணவன் கண் எதிரே விபத்து நடைபெற்று சரிந்து விழுந்த கீதா பிரியாவை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் விபத்தை ஏற்படுத்திய காஞ்சீபுரம் குமார் செட்டி தெருவை சேர்ந்த மதன் (42) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்