தாய் இறந்த துக்கம் தாளாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தாய் இறந்த துக்கம் தாளாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை;

Update:2021-12-28 22:23 IST
ஆனைமலை

ஆனைமலை அருகே தாய் இறந்த துக்கம் தாளாமல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சோகம் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கூலி தொழிலாளி

ஆனைமலையை அடுத்த பொங்காளியூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சிவக்குமாரின் தாயார் காளியாத்தாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக இறந்துவிட்டார்.

தாய் இறந்தது சிவக்குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு சென்ற சிவக்குமார், இரவில் அனைவரும் தூங்கிய பின்னர் மது குடித்துள்ளார். அப்போது தாய் இறந்த துக்கத்தில் இருந்த அவர், வாழ்க்கையில் விரக்தியடைந்து, தாயின் சேலையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மறுநாள் காலையில் சிவக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். 

சோகம்

பின்னர் சம்பவம் குறித்து அறிந்த கோட்டூர் போலீசார் விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்த துக்கம் தாளாமல், மகன் அவரது சேலையிலேயே தூக்குப்போட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்