சாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு
செல்வபுரம் அய்யப்பன் கோவிலில் சாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்து உள்ளனர். மேலும் அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.;
கோவை
செல்வபுரம் அய்யப்பன் கோவிலில் சாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசம் அடைந்து உள்ளனர். மேலும் அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மண்டல பூஜை
கோவை செல்வபுரம் தில்லை நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யப்ப சாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு சமீபத்தில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவித்து விரதம் தொடங்கியவர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பூஜையில் சாமிக்கு நெய், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
பக்தர்கள் பரவசம்
இந்த நிலையில் அதில் ஒருவர் தான் எடுத்த வீடியோவை கவனித்து பார்த்தபோது, நெய்யாபிஷேகம் நடைபெற்று கொண்டு இருந்தபோது அய்யப்ப சாமி சிலை கண் திறந்து மூடுவது போல பதிவாகி இருந்தது. இதை கண்டு அவர் நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இது தவிர சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
நெய்யாபிஷேகம் நடைபெற்றபோது சாமி சிலை கண் திறந்ததாக கூறப்படும் நிகழ்வு, கோவை மாவட்ட பக்தர்கள் இடையே பரபரப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.