போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;
கோவை
சாதி ரீதியாக அவதூறாக பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்ப்பு கூட்டம் ரத்து
கொரோனா பரவல் காரணமாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆனாலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்க வசதியாக கலெக்டர் அலுவலக வாசலில் புகார் மனுவை செலுத்த பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
அதில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களின் கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி தலைமையில் அளித்த மனுவில், பேரூர் வெள்ளிமலைபட்டணம் பகுதியில் ஓடையில் மழை காரணமாக 150 அடி நீளத்திற்கு மணல் படிந்து இருந்தது.
அதை சிலர் அதிகாரிகளின் துணையுடன் லாரியில் அள்ளி எடுத்து விற்பனை செய்கின்றனர். பின்னர் உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில் மணல் கடத்தல் தடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணல் கும்பல், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த விவசாயி ராமசாமியின் தோட்டத்தில் இருந்த 16 தென்னங்கன்றுகள் மற்றும் கம்பி வேலிகள் சேதப்படுத்தி விட்டனர்.
அவர்களமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இன்ஸ்பெக்டர் மீது புகார்
திராவிட தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை அவமதிக்கும்நபர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்.
அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்து முன்னணி
சார்பில் வடக்கலூர் பொதுமக்கள் அளித்த மனுவில், அன்னூர் ஒன்றியம் வடக்கலூரில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்தனர்.
இது குறித்த விசாரணைக்கு அழைத்ததால் நாங்கள் அன்னூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம்.
அப்போதுஅங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நித்யா, எங்களை சாதி ரீதியாக தரக்குறைவாக பேசினார்.
எனவே சாதி உணர்வோடு அவமதிக்கும் வகையில் பேசிய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.