தந்தை கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலி

கோவிலுக்கு சென்று விட்டு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது லாரி சக்கரத்தில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்.

Update: 2022-01-13 06:44 GMT
கோவிலில் தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வள்ளலார் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமலதா (29). இவர்களுக்கு ஆதிரன் (4), கவுசிக் (2) உள்பட 3 குழந்தைகள் உண்டு. இந்த நிலையில், இவர்களது உறவினர்கள் நேற்று இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்ல இருந்த நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு திரும்ப தயாராகினர். மனைவி கமலா உறவினரின் காரில் புறப்பட்டார்.

செல்வம் மோட்டார் சைக்கிளில் ஆதிரன், கவுசிக் ஆகிய 2 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

2 குழந்தைகள் பலி

இதற்கிடையே, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று சக்கர சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் மூன்று பேரும் சாய்ந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி 3 பேர் மீதும் ஏறி இறங்கியதில் குழந்தைகள் ஆதிரன், கவுசிக் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்தில் பலத்த காயம் அடைந்து கிடந்த செல்வம் தன் கண் முன்னே 2 மகன்களும் உடல் நசுங்கி பலியானதை கண்டு கதறி அழுதார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து செல்வத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சோக விபத்து

இந்த சம்பவம் குறித்து அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து இறந்து போன சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ராமையா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். உறவினர்களை சபரிமலைக்கு அனுப்பிவிட்டு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரண்டு மகன்கள் தலை நசுங்கி இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்