ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை

ஒரகடம் அருகே வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-01-14 23:00 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 26). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் ( 27). இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்துருக்கும், தினேசுக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் இரவு 9 மணியளவில் அந்த பகுதியில் உள்ள கடையின் முன்பு இருந்த கட்டிலில் சந்துரு தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ், சந்துருவின் வயறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் சந்துரு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர்் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார்.

மறியல்

இந்த கொலை சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை எதற்காக நடந்தது? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்தனர்.

இந்த நிலையில் சந்துருவின் உறவினர்கள் வாரணவாசி அருகே குற்றவாளியை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குற்றவாளியை கைது செய்து விட்டதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்