4 பஸ் உரிமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் அபராதம்

4 பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம்;

Update:2022-01-17 18:54 IST

கோவை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதையொட்டி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களை இயங்க அனுமதி இல்லை.

இந்த நிலையில்  இரவு கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு  இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உதயகுமார், பாலமுருகன், சிவகுருநாதன், குமரவேல் ஆகியோர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். 

இதில் ஊரடங்கு விதிகளை மீறி கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற 4 பஸ்கள் கணியூர் சோதனைச்சாவடி அருகே சிக்கியது. 

அந்த பஸ் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

பயணிகளின் நலன் கருதி அந்த 4 பஸ்களை மட்டும் சென்னைக்கு இயங்க அதிகாரிகள் அனுமதித்தனர்.


இதேபோல் காந்திபுரம் பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு வெளிமாவட்டங்களுக்கு செல்ல 15 தனியார் பஸ்கள்  தயாராக இருந்தன.

 உடனே அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அந்த பஸ்களை இயக்க அனுமதி மறுத்தனர்.

மேலும் செய்திகள்