மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது
சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா;
வடவள்ளி
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
சுப்பிரமணியசுவாமி கோவில்
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
அங்கு இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள், யாகசாலை வேள்வி, சுவாமி திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று மாலை தங்க மயில் வாகனத்தில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
திருக்கல்யாணம்
சுப்பிரமணிய சுவாமி -வள்ளி, தெய்வானை திருக்கல்யாணநிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் சுப்பிரமணியசாமி வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
காலை 10.40 மணிக்கு தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட சிறிய திருத்தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
தேரை கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஆதிவாசிகள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தைப்பூச நிகழ்வுகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
நாளை (புதன்கிழமை) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.
20- ந் தேதி மகா தரிசனம், மாலை 4 மணிக்கு கொடி இறக்குதல், 21- ந் தேதி வசந்த உற்சவ திருவிழாவுடன் விழா நிறைவடைகிறது.