15 நாட்களாக நீடிப்பதால் ரூ 1500 கோடி உற்பத்தி பாதிப்பு

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 15 நாட்களாக நீடிப்பதால் ரூ.1500 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர்.;

Update:2022-01-23 21:39 IST
கோவை

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 15 நாட்களாக நீடிப்பதால் ரூ.1500 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர். 

விசைத்தறி உரிமையாளர்கள்

கோவை மாவட்டத்தில் சோமனூர், கருமத்தம்பட்டி, சுல்தான் பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில்  மொத்தம் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

 இவற்றின் மூலம் தினமும் 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இவற்றின் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதன் மூலம் நேரிடையாக மற்றும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. 

விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்க வில்லை. இந்த நிலையில், புதிய கூலி உயர்வு கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்த போராட்டம்

அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்ற இதர ரகங் களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கூலி உயர்வு அமல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடித்து வந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த போராட்டம் 15-வது நாளான நேற்றும் நீடித்தது. இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

ரூ.1,500 கோடி உற்பத்தி பாதிப்பு

கடந்த 15 நாட்களாக வேலைநிறுத்தம் காரணமாக ரூ.1500 கோடிக்கு காடா துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கூலி உயர்வு தொடர்பாக கடந்த 20-ந் தேதி கோவை தொழிலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 

இதையடுத்து வருகிற 27-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்