80 வயது மூதாட்டியை கற்பழித்த 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம் அருகே 80 வயது மூதாட்டியை கற்பழித்த 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-01-23 21:23 GMT
சேலம்:
சேலம் அருகே 80 வயது மூதாட்டியை கற்பழித்த 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மூதாட்டி கற்பழிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது. இந்தநிலையில் மூதாட்டி கடந்த அக்டோபர் மாதம் 24-ந் தேதி அவரது தோட்டத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் மதுபோதையில் அங்கு சென்று மூதாட்டியிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் திடீரென 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை கீழே தள்ளி மாறி, மாறி கற்பழித்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதையடுத்து நங்கவள்ளி பெரியசோரகை அருகே உள்ள தேங்காய்கொட்டாய் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் சீனிவாசன் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் விக்னேஷ் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 
இந்தநிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று கலெக்டர் கார்மேகம், சீனிவாசன், விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்