பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 3 கன்டெய்னர் லாரிகள், கார் மோதல்; பெண் பலி
பூந்தமல்லி அருகே கன்டெய்னர் லாரிகளுக்கு நடுவில் சிக்கிய கார், அப்பளம்போல் நொறுங்கியது.;
ஸ்ரீபெரும்புதூர், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 42). இவருடைய மனைவி செல்வி (38). நேற்று கணவன்-மனைவி இருவரும் காரில் பூந்தமல்லி நோக்கி வந்தனர். பூந்தமல்லி அடுத்த பாப்பன்சத்திரம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் பின்னால் வந்த லட்சுமணன் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரின் பின்புறம் பயங்கரமாக மோதியது. அதேநேரத்தில் காருக்கு பின்னால் வந்த மேலும் 2 கன்டெய்னர் லாரிகளும் அடுத்தடுத்து கார் மீது மோதின. சங்கிலி தொடர்போல் அடுத்தடுத்து 3 கன்டெய்னர் லாரிகள், கார் மோதிக்கொண்டன.
இதில் கன்டெய்னர் லாரிகளுக்கு நடுவில் சிக்கிய கார், அப்பளம்போல் நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த செல்வி, கணவர் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். லட்சுமணன் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.