நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை

போளூர் அருேக நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-24 17:43 GMT
போளூர்

போளூர் அருேக நிலத்தகராறில் விவசாயி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

நிலத்தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பொத்தரை குசால்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணன் (வயது 60), கோவிந்தசாமி (40), விவசாயிகளான இருவரும் அண்ணன்-தம்பி ஆவார்கள். 

இவர்களுக்கு நிலத்தில் பங்கு பிரித்ததில் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 22-ந்தேதி கோவிந்தசாமியும் அவரின் மனைவி மீனாவும், நாராயணன் வீட்டுக்கு வந்து, நிலத்தில் 3.5 சென்ட் அதிகமாக எடுத்துக்கொண்டு விட்டாய் எனக்கூறி, ஆபாசமாக பேசி, வாய்த்தகராறில் ஈடுபட்டனர். 

பரிதாப சாவு

அப்போது கோவிந்தசாமி, தனது அண்ணன் நாராயணனை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் தலையில் படுகாயம் அடைந்த நாராயணனை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து, வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவன்-மனைவி கைது

இதுகுறித்து அவரின் மகன் ஏழுமலை போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் விசாரணை நடத்தி வருகிறார். 

இதுதொடர்பாக கோவிந்தசாமி, மீனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்