சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது

சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-25 19:20 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 55). இவர் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக பசும்பலூர் வருவாய் ஆய்வாளர் அன்பரசன் விசாரணை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர் அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது கை.களத்தூரை சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரத்தினசாமி (39), வெங்கடேஷ் (40), பெருநிலா கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (39) ஆகிய 4 பேரும் அன்பரசனிடம் சென்று ஏன் சாதி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்