குடியரசு தின விழா விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குடியரசு தினவிழா விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

Update: 2022-01-26 17:14 GMT
பென்னாகரம்:
குடியரசு தினவிழா விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று குடியரசு தினவிழா விடுமுறையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி, ஐந்தருவி வழியாக மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.
விற்பனை படுஜோர்
தொடர்ந்து அவர்கள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் பஸ் நிலையம், நடைபாதை, அஞ்செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ஊட்டமலை, ஆலம்பாடி, மணல்திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேலும் செய்திகள்