பொள்ளாச்சியில் சப் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்
பொள்ளாச்சியில் நடந்த குடியரசு தின விழாவில் சப்-கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் நடந்த குடியரசு தின விழாவில் சப்-கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.
குடியரசு தின விழா
நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பொதுமக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
நகராட்சி, போலீஸ் நிலையம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆணையாளர் தாணுமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் துணை சூப்பிரண்டு தமிழ்மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
வனத்துறை அலுவலகம்
பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் நடந்த விழாவில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, வனத்துறையினர் மற்றும் அலுவலர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
ஆனைமலையில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். டாப்சிலிப்பில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் வனச்சரகர் காசிலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவர் வெள்ளை நடராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு பள்ளிகள்
எஸ்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ், உதவி ஆசிரியர் ஆயிஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஏரிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியை கீதா தேக்கு, பப்பாளி விதைபந்துகளை பொதுமக்களுக்கு வழங்கினார். ஆனைமலை கிளை நூலகத்தில் நடந்த விழாவில் நூலகர் மீனாகுமாரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.