அரியலூரில் குடியரசு தின விழா

அரியலூரில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-01-26 19:19 GMT
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 73-வது குடியரசு தின விழா நேற்று அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து கலெக்டர், திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் பறக்க விட்டனர்.
முதல்-அமைச்சர் பதக்கம்
பின்னர் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 போலீசாருக்கு முதல்-அமைச்சர் காவலர் பதக்கமும், 313 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். மேலும், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதையடுத்து கலெக்டர் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
 பின்னர், விளையாட்டு மைதான வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னூலாப்தீன், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள் ரத்து
 கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்