பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம்

பூட்டிய வீட்டுக்குள் ஆண் பிணம்

Update: 2022-01-27 17:39 GMT
ஆரல்வாய்மொழி, 
தாழக்குடி அருகே உள்ள வீரநாராயணமங்கலம் தெற்குதெருவை சேர்ந்தவர் ஹரிஸ் பாபு (வயது38). இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையுடன் பிரிந்து சென்றார். அதன்பின்பு பாபு தாய் வீட்டில் தங்கியிருந்து எந்த வேலைக்கும் செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபுவின் தாயார் வெளியூர் சென்றுவிட்டார். அதன்பின்பு வீட்டில் பாபு மட்டும் தனியாக தங்கியிருந்தார். 
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாபு தரையில் விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் ரத்த காயம் இருந்ததாக கூறப்படுகிறது. 
இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்