சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் தர்ணா போராட்டம்

குருபரப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-01-27 17:45 GMT
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்கக்கோரி, விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே அரசு சார்பில் சிப்காட் அமைக்க 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள சிலரிடம் இருந்து 60 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தி தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனம் சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிலத்தில் விவசாயம் செய்து வரும் 32 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகள் சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். 
அங்கு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி தரையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
வேலை வாய்ப்பு
60 ஏக்கர் நிலத்தில் பல தலைமுறையாக 32 குடும்பங்களை சேர்ந்த நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நில அனுபவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் எங்கள் அனுமதி இன்றி சிப்காட்டுக்கு நிலம் வழங்கி விட்டனர்.
இதனால் நாங்கள் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குருபரப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்