கரூரில் அரசியல் கட்சிகளின் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் அகற்றம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து கரூரில் அரசியல் கட்சியினரின் போஸ்டர், சுவர் விளம்பரங்கள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-27 19:31 GMT
கரூர், 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள், சுவர்களில் வரையப்பட்ட கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அகற்றும் பணி
கரூர் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினரின் போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் கரூர் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கரூர் சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பரங்களை மாநகராட்சி ஊழியர்கள் சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் பணியிலும், போஸ்டர்களை அகற்றும் பணியிலும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்