உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி இன்று வேட்பு மனு தொடங்கப்பட உள்ள நிலையில் 5 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-01-27 21:06 GMT
சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சி தேர்தலையொட்டி இன்று வேட்பு மனு தொடங்கப்பட உள்ள நிலையில் 5 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி தேர்தல்
புதிதாக உருவாக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 
இந்த நிலையில் இன்று காலை வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட இருக்கிறது. மனுக்களை பெற வசதியாக சிவகாசி மாநகராட்சி அதிகாரிகள் ரமேஷ், ராமச்சந்திரன், சுருளி நாதன், கார்த்திகேயன், அழகேஸ்வரி ஆகியோரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணமூர்த்தி நியமித்துள்ளார். சிவகாசி மாநக ராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 10 வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி ரமேஷிடமும், 11 முதல் 20 வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி ராமச்சந்திரனிடமும், 21 முதல் 30 வார்டுகளை சேர்ந்தவர் அதிகாரி சுருளி நாதனிடமும், 31 முதல் 39 வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி கார்த்திகேயனிடமும், 40 முதல் 48 வார்டுகளை சேர்ந்தவர்கள் அதிகாரி அழகேஸ்வரியிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். பிப்ரவரி 4-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வேட் பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி
மனு தாக்கலில் செய்யப்படும் இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தின் வெளியே புதிய கட்டிட திறப்பு விழாவை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை ஊழியர்கள் மறைத்தனர். 
மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்