வாசுதேவநல்லூரில் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்

Update: 2022-01-27 23:03 GMT
சிவகிரி:
வாசுதேவநல்லூரில் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தம்பதி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சாலைத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 75). இவரது மனைவி முனியம்மாள் (70). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. 2-வது மகன் பெரியசாமியுடன், கணேசன், முனியம்மாள் வசித்து வந்தனர்.
கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி முனியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி பேசாமல் இருந்தனர்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலையில் கணேசன்-முனியம்மாள் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது கணேசன், முனியம்மாள் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்ைத (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசார் விசாரணை
தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
வாசுதேவநல்லூரில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
.........

மேலும் செய்திகள்