கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு நீலகிரி மாணவி பூர்வாஸ்ரீ முதலிடம்

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நீலகிரி மாணவி பூர்வாஸ்ரீ முதலிடத்தை பிடித்தார். பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு வருகிற 21-ந் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.;

Update:2022-01-28 22:09 IST
வடவள்ளி

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நீலகிரி மாணவி பூர்வாஸ்ரீ முதலிடத்தை பிடித்தார். பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு வருகிற 21-ந் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. 

தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான இளம் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி  நடந்தது. 

இதில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பூர்வாஸ்ரீ என்ற மாணவி 200-க்கு 200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார். நாமக்கல் மாணவி புஷ்கலா 199 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், ராமநாதபுரம் சாஜின் 198.75 மதிப் பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அரசு பள்ளி

தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் அரசுப் பள்ளியில் படித்த தர்மபுரி மாணவி பவித்ரா 193.33 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு களுக்கான தரவரிசை பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனுஜா 191.43 மதிப்பெண் பெற்று முதலிடத்தை யும், புதுக்கோட்டை மாணவர் ஜெரால்ட் எடிசன் 189.68 மதிப் பெண் பெற்று 2-ம் இடத்தையும், நாமக்கல் மாணவர் ராம் பிரசாத் 189.99 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தார்.

வேளாண் பொறியியல் பட்டயபடிப்பு

வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனுபா 191.43 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 190.03 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், புதுக்கோட்டை மாணவர் கைலாஷ் சங்கர் 189.99 மதிப்பெண் பெற்று 3-வது இடமும் பிடித்தார். 

மேலும், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக நடத்தப் படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 11-ந் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

பொது கலந்தாய்வு 

இதனைத் தொடர்ந்து 14,15 ஆகிய தேதிகளில் தொழில்முறை கல்வி பிரிவினர், 17 மற்றும் 18-ந் தேதி அரசு பள்ளிகளில் படித்த 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவினருக்கு நடக்கிறது. பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலம் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. 

கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 25-ந் தேதி ஆன்லைனில் நடக்கிறது. மேலும், மார்ச் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், மாணவர் கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். 

வெளிநாடு வாழ் இந்தியர்

தொடர்ந்து, முதல் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப் பிரிவுகள் இட ஒதுக்கீடு மார்ச் 8-ந் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 11 முதல் 13-ந் தேதி வரை நேரடியாக நடக்கிறது. 

2-ம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு ஆன்லைன் மூலம் மார்ச் 16-ந் தேதி நடக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு நேரடி கலந்தாய்வு மார்ச் 17-ந் தேதி நடக்கிறது. வேளாண் தொழில் நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு நேரடி கலந்தாய்வு மார்ச் 18-ந் தேதி நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 19 முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில், மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். 

3-ம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவு இட ஒதுக்கீடு மார்ச் 24-ந் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது. பட்டயப் படிப்பு களுக்கான கலந்தாய்வு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப் படும் என்று பதிவாளர்  கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்