குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

ஆட்டை விரட்டி சென்றபோது குட்டையில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலியாகினார்.

Update: 2022-01-28 18:05 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 45). இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்களுக்கு நாகலட்சுமி, ஜோதிலட்சுமி, திவ்யபாரதி, பரமேஸ்வரி ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இதில் பரமேஸ்வரி (14) நல்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் இன்று யாகப்பன்பட்டி அருகே அரசு மருத்துவக் கல்லூரி பின்புறத்தில் சக தோழிகளுடன் பரமேஸ்வரி ஆடு மேய்க்க சென்றார்.அப்போது ஆட்டை விரட்டி சென்ற போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மழை நீர் தேங்கி இருந்த குட்டையில் தவறி விழுந்தாள். அதில் நீரில் அவள் மூழ்கினாள். இதை பார்த்த சக தோழிகள் கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குட்டையில் மூழ்கிய பரமேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மேலும் செய்திகள்