வேலூர் அரசு மருத்துவமனையில் ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகனுக்கு மருத்துவ பரிசோதனை

ராஜீவ் கொலை வழக்கு கைதி முருகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2022-01-28 18:12 GMT
அடுக்கம்பாறை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார். 
ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு கடந்த சில நாட்களாக பல் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். 

இதனைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பலத்த காவலுடன் முருகனை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பல்வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் பரிசோதனை, டி.பி. வார்டு மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக முருகன் காவி உடையில் வெளியே வந்தார். ஆனால் இன்று வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
 சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் மதியம் 1 மணி அளவில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்