சென்னிமலை வனப்பகுதியில் குப்பைகள் கொட்டவும்-விலங்குகளுக்கு உணவு அளிக்கவும் தடை- வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை

சென்னிமலை வனப்பகுதியில் குப்பைகள் கொட்டவும், விலங்குகளுக்கு உணவு அளிக்கவும் கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-29 20:49 GMT
சென்னிமலை
சென்னிமலை வனப்பகுதியில் குப்பைகள் கொட்டவும், விலங்குகளுக்கு உணவு அளிக்கவும் கூடாது என வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 
அடிபட்டு இறக்கும் குரங்குகள்
சென்னிமலை முருகன் கோவில் உள்ள வனப்பகுதி சுமார் 1,700 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் மான்கள், மயில்கள் மற்றும் குரங்குகள் ஏராளமாக வசிக்கின்றன.
 வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சிலர் குப்பைகளை கொட்டுவதும், மதுபாட்டில்களை வீசுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. மேலும் தார் சாலைகளில் சுற்றும் குரங்குகளுக்கு சிலர் உணவுகளை வீசி வருவதால் அடிக்கடி குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. 
எச்சரிக்கை பலகை
இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில், வனப்பகுதியில் குப்பைகள் கொட்டவும், மது அருந்தவும், குரங்குகளுக்கு உணவு அளிப்பதும் தவறு என்றும் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னிமலை வனக்காப்பாளர் பாரதி உத்தரவின் பேரில், சென்னிமலையில் காங்கேயம் ரோட்டில் உள்ள கணுவாய் மற்றும் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் ஆகிய இடங்களில் வனத்துறை ஊழியர்கள் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்