ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாக பரிசல் சவாரி

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர்.

Update: 2022-01-30 16:16 GMT
பென்னாகரம்:
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர்.
சுற்றுலா பயணிகள் 
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால், நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் துறையில் இருந்து ஐந்தருவி வழியாக மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி சென்றனர். சுற்றுலா பயணிகள் தடையை மீறி சினி பால்சில் குளித்து மகிழ்ந்தனர்.
ஏமாற்றம்
தொடர்ந்து அவர்கள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பஸ் நிலையம், நடைபாதை, அஞ்செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் ஊட்டமலை, ஆலம்பாடி, மணல்திட்டு, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

மேலும் செய்திகள்