வேதாரண்யம் கடற்கரையில் 3 கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ள சேற்றை அகற்றும் பணி

இன்று தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் புனித நீராட வசதியாக வேதாரண்யம் கடற்கரையில் 3 கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ள சேற்றை அகற்றும் பணி நடைபெற்றது.

Update: 2022-01-30 16:26 GMT
வேதாரண்யம்:
இன்று தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் புனித நீராட வசதியாக வேதாரண்யம் கடற்கரையில் 3 கிலோ மீட்டர் தூரம் பரவியுள்ள சேற்றை அகற்றும் பணி  நடைபெற்றது.
தை அமாவாசை
 ஆண்டு தோறும் அடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் திரளான பொதுமக்கள் கோடியக்கரை சித்தர்கட்டம் எனும் அக்னி தீர்த்த கடலிலும், வேதாரண்யம் வேதநதி எனும் சன்னதி கடலிலும் புனித நீராடி தங்கள் மூதாதையா்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் அவர்கள் வேதாரண்யம் வேதாண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். 
கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடி, தை அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை.  தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
கடற்கரையில் சேறு அகற்றும் பணி
இந்த நிலையில் இன்று(திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி மக்கள் கடலில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி வேதாரண்யம் வருவாய் துறையினர், நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர், கோவில் நிர்வாகம் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 அடி வரை கடல் சேறு பரவி உள்ளது. கடலில் மக்கள் புனித நீராட வசதியாக கடற்கரையில் பரவி கிடக்கும் சேற்றை அகற்ற நகராட்சி ஆணையர் ஹேமலதா உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி பொறியாளர் மற்றும் பணியாளர்கள் நேற்று பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்