பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.16 நிர்ணயம்

ஜனவரி மாத குறைந்தபட்சமாக பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.16 என நிர்ணயம் செய்து தென்மண்டல செயல் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.

Update: 2022-01-31 13:08 GMT
குன்னூர்

ஜனவரி மாத குறைந்தபட்சமாக பச்சை தேயிலை விலை கிலோவுக்கு ரூ.16 என நிர்ணயம் செய்து தென்மண்டல செயல் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.

பச்சை தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தொழிலாளர்களை வைத்து பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். 

இதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி, தோட்ட பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்கின்றனர். ஆனால் பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.30 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

குறைந்தபட்ச விலை

இதற்கிடையில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் மூலம் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாத குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 16 ரூபாய் 5 பைசா என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்திய தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2021-ம் ஆண்டின் தேயிலை கட்டுப்பாட்டு ஆணைப்படி(சந்தைப்படுத்துதல்) பச்சை தேயிலைக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி மாத விலை கிலோவுக்கு 16 ரூபாய் 5 பைசா ஆகும். 

ஆய்வு செய்ய வேண்டும்

இந்த விலை கடந்த மாதத்தில் நடந்த ஏலத்தில் விற்பனையான சி.டி.டி.சி. தேயிலைத்தூளின் விலையை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதை தேயிலை வாரிய கள அதிகாரிகள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், தேயிலை வளர்ச்சி உதவி இயக்குனர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்