கோவை அருகே மரத்தில் 3 நாட்களாக தவித்த பூனை
கோவை அருகே மரத்தில் 3 நாட்களாக தவித்த பூனை
வடவள்ளி
கோவையை அடுத்த பாப்பநாயக்கன்புதூர், நியூ தில்லை நகர் 10- வது வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு ஒரு மரம் உள்ளது. இந்த மரத்தின் உச்சியில் ஒரு பூனை ஏறியது.
பின்னர் அந்த பூனையால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் அந்த பூனை கடந்த 3 நாட்களாக அந்த மரத்தில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்தது. மேலும் இரவில் கத்தியபடியே இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கோவை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பூனையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பூனை தீயணைப்பு படை வீரர்களை பார்த்ததும் மரத்தின் மேல் பகுதியில் அங்குமிங்கும் ஓடியது.
இதையடுத்து ஒருவழியாக தீயணைப்புத் துறையினர் போராடி அந்த பூனையை மீட்டு கீழே கொண்டு வந்தனர். பின்னர் அந்த பூனையை கீழே விட்டதும் அது அங்குள்ள ஒரு வீட்டுக்குள் ஓடி ஒளிந்தது.
மரத்தில் 3 நாட்களாக போராடிய பூனையை மீட்ட தீயணைப்பு படை வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.