தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;

Update:2022-02-01 23:34 IST
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


குண்டும் குழியுமான சாலை 

கோவை- திருச்சி சாலையில் இருந்து அரசு கலைக்கல்லூரி பின் புற வாசல் வழியாக ரேஸ்கோர்ஸ் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இந்த வழியாக தினமும் ஏராள மான வாகனங்கள் சென்று வருகின்றன. அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மாரிச்சாமி, கோவை.

செயல்படாத வாட்டர் ஏ.டி.எம்.

  பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை தடுக்கவும், சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்காகவும் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டன. ஆனால் இவை முறையாகப் பராமரிக்கப் படாததால், பழுதடைந்து பயனற்ற நிலையில் கிடக்கின்றன. எனவே வாட்டர் ஏ.டி.எம் களைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அபுத்தாகீர், கோத்தகிரி.

அரசு பஸ்கள் நின்று செல்லுமா?

  சுல்தான்பேட்டை அருகே தாசநாயக்கன்பாளையத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இருந்து பல்லடம்-திருப்பூர், பொள் ளாச்சிக்கு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின் றனர். இந்த நிலையில், சில பஸ்கள் இங்கு நிறுத்துவது இல்லை. இதனால், மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார் கள். எனவே தாசநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  கர்ணன், பொள்ளாச்சி.

கொசுக்கள் தொல்லை

  கோவை கவுண்டம்பாளையம் மூவர் நகர், செந்தமிழ் நகர், விநாயகர் கோவில் வீதி நகர் ஆகிய பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இங்கு கொசு மருந்து அடித்து பல நாட்கள் ஆவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுற்றி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும்.
  முருகேசன், கவுண்டம்பாளையம்.

குடிநீர் வசதி

  அன்னூர் அருகே உள்ள கரியாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆனால் இங்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் குடிநீருக்காக அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும்.
  ஆனந்தகுமார்,கரியாம்பாளையம்.

சாதாரண பஸ்கள் இயக்க வேண்டும்

  கோவைப்புதூரில் இருந்து காந்திபுரம், கணபதி வழித்தடத்தில் 3-டி என்ற அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை அனைத்துமே சொகுசு பஸ்கள்தான் ஆகும். இதில் கட்டணம் மிகவும் அதிகம் என்பதால் கோவைப்புதூரில் இருந்து காந்தி புரத்துக்கு வருபவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் சாதாரண பஸ்களில்தான் பெண்களுக்கு இலவசம் என்பதால் அவர்களால் சொகுசு பஸ்களில் செல்ல முடிய வில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோவைப்புதூருக்கு சாதாரண பஸ்களை இயக்க வேண்டும்.
  பி.சுரேஷ், கோவைப்புதூர்.

சாக்கடை கால்வாய்

  ஊட்டி நகராட்சி மார்க்கெட் நடைபாதை அடியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனை சீரமைக்க இன்டர்லாக் கற்கள் அகற்றி குழி தோண்டப் பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். அதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
  மஞ்சுளா, பாம்பேகேசில், ஊட்டி.

திறந்தவெளி கழிப்பிடம்

  ஊட்டி எட்டின்ஸ் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி உள்ளது. அங்கு பலரும் இயற்கை உபாதைகளை கழிப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக நடந்து செல்லும்போது மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பாலாஜி, கிரீன்பில்டு, ஊட்டி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை சாய்பாபாகாலனி, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே ராமலிங்கம் காலனி உள்ளது. இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவை சரியாக சுத்தம் செய்யப்படாததால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை நீடித்து வருவதால், அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  சுரேஷ், சாய்பாபாகாலனி.

திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்

  கோவை சாய்பாபா காலனி 6-வது வீதியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மீது கான்கிரீட் போடாமல் இருப்பதால் திறந்து கிடக்கிறது. எனவே அந்த வழியாக நடந்து செல்லும் மாணவர்கள் நிலைதடுமாறி உள்ளே தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் மீது கான்கிரீட் மூடி அமைக்க வேண்டும்.
  கார்த்திக், கோவை.
  


மேலும் செய்திகள்