சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள்

மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் முன்பு சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி நிற்கும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது.;

Update:2022-02-04 17:32 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்து நேற்று முன்தினம் வரை மறைமலைநகர், நந்திவரம்- கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில் ஒரு சில சுயேச்சைகள், பா.ஜ.க., பா.ம.க. மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் என்பதால், நேற்று மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க., பா.ம.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 

அப்போது வேட்பாளர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மாநாட்டுக்கு வந்திருப்பதுபோல் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி ஆணையர், தேர்தல் அதிகாரிகள், போலீசார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை, ஒரே இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது. இதேபோல நேற்று நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் செய்திகள்