எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி அழகு நிலைய பெண் ஊழியர் பலி

திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற அழகு நிலைய பெண் ஊழியர், எக்ஸ்பிரஸ் ெரயில் மோதி பலியானார். அவரது உடல்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிதறி கிடந்தன.

Update: 2022-02-06 10:14 GMT
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பலி

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மனைவி திவ்யா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. திவ்யா, திருவள்ளூரில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு திவ்யா, வேலை முடிந்து திருவள்ளூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். புட்லூர் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார். தண்டவாளத்தின் நடுவில் சென்றபோது சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது.

போலீசார் விசாரணை

இதில் இருசக்கர வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட திவ்யா, உடல் சிதறி பலியானார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரது உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. அவரது கால் மட்டும் புட்லூர் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சிக்கி கிடந்தது.

திருவள்ளூர் ரெயில்வே போலீசார், அங்கு சிதறி கிடந்த திவ்யாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்