ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2022-02-07 18:30 GMT
ராமேசுவரம்,

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலத்தை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இலங்கை காரைநகர் கடற்படை முகாமில் நேற்று ஏலம் விடப்பட்டன.
இதை கண்டித்தும், தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தியும் நேற்று ராமேசுவரம் மீன்துறை டோக்கன் அலுவலகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசுராஜா, சகாயம், எமரிட் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்

இதை தொடர்ந்து டோக்கன்அலுவலகம் அருகே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக அழைத்துவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ந்தேதி, அனைத்து மீனவர்களையும் ஒன்றுதிரட்டி ராமேசுவரம் ரெயில் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்