ஒரு பெண் மீது 2 பேருக்கு ஆசை: காதல் போட்டியில் வாலிபர்கள் கட்டிப்புரண்டு சண்டை

சென்னை கோடம்பாக்கம் காதல் போட்டியில் வாலிபர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

Update: 2022-02-08 10:11 GMT
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 22). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்கிறார். அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் மீது சந்தோஷ்குமார் காதல் வயப்பட்டார். அதே பெண்ணை சந்தோஷ்குமாரின் நண்பர் சரண் என்பவரும் காதலித்தார். இருவரும் குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் தங்களது காதலை சொன்னதால், யாருக்கு பச்சைக்கொடி காட்டுவது என்பதில் அந்த பெண் குழப்பமடைந்தார்.

இந்த நிலையில் காதலை கைவிட்டு விலகிச்செல்லுமாறு சந்தோஷ்குமார், தனது நண்பர் சரணை கேட்டுக்கொண்டார். ஆனால் சரண் அதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார், சரணிடம் சண்டை போட்டார். இருவரும் தெருவில் கட்டிப்புரண்டனர். காதலால் கட்டிப்புரண்ட இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். சண்டையின் உச்சக்கட்டத்தில், சந்தோஷ்குமாரை, சரண் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சந்தோஷ்குமார், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சரணை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்