திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பிவிட வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்...!

திருடிய மோட்டார் சைக்கிளை திருப்பிவிட வந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்

Update: 2022-02-08 10:24 GMT
சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, எல்லீஸ்ரோடு, பெரிய மசூதி தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 59). பூ வியாபாரம் செய்து வருகிறார். வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக இளங்கோவன் திருவல்லிக்கேணி போலீசில் புகார் கொடுத்தார். உதவி போலீஸ் கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் திருடிய மோட்டார் சைக்கிளை, இளங்கோவன் வீட்டு முன்பு மீண்டும் விடுவதற்காக 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கினார்கள். அதில் ஒருவர் போலீசில் மாட்டினார். இன்னொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர் பெயர் சூர்யபிரகாஷ் (22). சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, நாராயணபுரத்தை சேர்ந்தவர். இவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஆவார். அவர் கைது செய்யப்பட்டார். 

மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. தங்களது தேவைக்காக மோட்டார் சைக்கிளை திருடியதாகவும், தேவை முடிந்தவுடன் மீண்டும் மோட்டார் சைக்கிளை திருடிய இடத்தில் விடுவதற்கு வந்த போது, போலீசாரிடம் மாட்டிக்கொண்டதாகவும் கைதான சூர்யபிரகாஷ் தெரிவித்தார். தப்பி ஓடியவர் பெயர் அமர் என்பதாகும். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்