அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப் கொடுக்க கூடாது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப் கொடுக்க கூடாது என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அதிகாரி அறிவுரை வழங்கினார்.;
பொள்ளாச்சி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப் கொடுக்க கூடாது என்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அதிகாரி அறிவுரை வழங்கினார்.
பூத் சிலிப்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் வாக்காளர்கள் வாக்களிக்க 89 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் தாணுமூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வாக்குச்சாவடி முகவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க வேண்டும். பூத் வழங்கும் தேதி, நேரம் போன்றவற்றை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப்பை கொடுக்க கூடாது.
அரசியல் கட்சியினரிடம் கொடுத்தால் தேவை இல்லாமல் பிரச்சினைகள் ஏற்பட கூடும். தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப்பை கொடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிக்க வேண்டும்
2 நாட்களில் பூத் சிலிப்பை முழுமையாக வீடு, வீடாக சென்று கொடுக்க வேண்டும். விடுபட்ட வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று வழங்க வேண்டும். பூத் சிலிப் வழங்கும் பணியினை மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
நேர்மையான முறையில் தேர்தலை நடத்த அனைவரும் பணியாற்ற வேண்டும். மேலும் தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று பேரூராட்சிகளிலும் பூத் சிலிப்வினியோகம் செய்வது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.