கோவையில் ரூ.2¾ லட்சம் மதிப்புள்ள 275 ஜோடி கொலுசுகள் பறிமுதல்
கோவையில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற 275 ஜோடி கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.;
கோவை
கோவையில் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்ற 275 ஜோடி கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பறக்கும்படை கண்காணிப்பு
கோவை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் இதுவரை ரூ.1½ கோடி வரை பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி 69- வது வார்டு காமராஜபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நேற்று காலை 10 மணி அளவில் கொலுசு வினியோகிக்கப்படுவதாக பா. ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
275 ஜோடி கொலுசுகள் பறிமுதல்
இதன் பேரில் மத்திய மண்டல பறக்கும் படை துணை தாசில்தார் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு இருந்து கொலுசுகளை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மொத்தம் 65 ஜோடி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கற்பூர நகர் பகுதியில் மதியம் 1 மணி அளவில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொலுசுகள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் துணை தாசில்தார் ஜெயசித்ரா தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்த 210 ஜோடி கொலுசுகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 275 ஜோடி கொலுசுகளின் மதிப்பு சுமார் ரூ.2¾ லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து இந்த கொலுசுகள் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.