மனைவி, மகளை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு போலீஸ் நிலையத்தில் சரண்

குடும்பத்தகராறில் மனைவி, மகளை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு, மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Update: 2022-02-25 09:19 GMT
கத்திக்குத்து

மீஞ்சூர் பஜார் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (வயது 40). போலீஸ் ஏட்டான இவர், சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய மனைவி பூர்ணிமா (35). இவர்களுக்கு பத்மினி (16), கார்த்திகா (13), ராஜஸ்ரீ (10) என 3 மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், மனைவி பூர்ணிமாவை கத்தியால் குத்தினார். இதனை அவருடைய மகள் பத்மினி தடுத்தார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

போலீசில் சரண்

இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு இருவரும் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு ராஜேந்திரன், பின்னர் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்