காஞ்சீபுரம் சித்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி சொத்து மீட்பு; அறநிலையத்துறை நடவடிக்கை

காஞ்சீபுரம் சித்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடம் மீட்கப்பட்டது.;

Update:2022-02-25 16:18 IST
காஞ்சீபுரம் தாலுகா காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 61 ஆயிரத்து 680 சதுர அடி இடத்தில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனை கே.பி.கே.ஸ்ரீகாந்த் என்பவருக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் கீழ் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நியாய வாடகை செலுத்தாத காரணத்தினால் அவர் மீது கோவில் நிர்வாகத்தின் சார்பாக காஞ்சீபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தொடர்ந்து சீல் வைக்க முயன்ற போது, ஆக்கிரமிப்பாளர் தாமாக முன்வந்து இடத்தையும் கட்டிடத்தையும் ஒப்படைக்க முன்வந்தார்.

இந்தநிலையில், கோவில் பரம்பரை அறங்காவலர் பாலசுப்பிரமணியன் குருக்களிடம் நேற்று நிலம் மற்றும் கட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனுடைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும். ஆக்கிரமிப்புதாரரால் செலுத்தப்பட வேண்டிய வாடகை நிலுவை கணக்கீடு செய்யப்பட்டு வசூலிக்கப்படும்.

மேற்கண்ட தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்