செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி; வடமாநில சிறுவன் கைது

காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.;

Update:2022-03-07 16:10 IST
செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், தன்னுடைய முகநூல் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை எடுத்து யாரோ மர்ம நபர் போலியான கணக்கு தொடங்கி தன்னுடைய நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த குற்றத்தை செய்தவர், 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அந்த சிறுவனை கைது செய்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்