பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி பெண், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நாகையில் பரபரப்பு

பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-12 18:45 GMT
நாகப்பட்டினம்:-

பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தர்ணா போராட்டம்

நாகை ஆரியநாட்டு தெருவை சேர்ந்தவர் விமலாதேவி(வயது 26). மாற்றுத்திறனாளியான இவர், தனது தாய் தமிழரசி மற்றும் குடும்பத்துடன் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். 
அப்போது விமலாதேவியின் தாயார் தமிழரசி கூறியதாவது:- 
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி சங்கர் என்பவருடன் எனது மகளுக்கு திருமணம் நடந்தது. 15 நாட்கள் மட்டுமே எனது மகளுடன் சங்கர் குடும்பம் நடத்தினார். அதன் பின்னர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 

சேர்த்து வைக்க வேண்டும்

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்றுவரை எங்களுடன் சங்கர் போனில் கூட பேசியது இல்லை. நாங்கள் போனில் தொடர்பு கொண்டால் கூட அவர் பேச மறுக்கிறார். எனது மகளை, அவருடைய கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். 
இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் பலன் இல்லை. எனவே கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். 
இவ்வாறு அவர் கூறினார். 

நடவடிக்கை 

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று மீண்டும் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறி போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்