மதுராந்தகம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.;
திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியனூரை சேர்ந்தவர் கலைமணி செல்வம் (வயது 22). இவர் வெளிநாட்டில் இருந்து வருகை தர உள்ள உறவினரை அழைத்து வருவதற்காக காரில் உறவினர்களுடன் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காரை டிரைவர் ராஜேஷ் ஓட்டிச்சென்றார்.
கார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அடுத்த சின்னகெள்ளம்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது.
இதில் கலைமணி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் டிரைவர் உள்ளிட்ட உறவினர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி்க்கப்பட்டனர்.
இதுகுறித்து படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.